"ஷுரு ஷுரு மேன் ஏக் நங் பனானே மேன் ஆதி கல்லக் லக்தி தி மேரி [முன்பு ஒரு சல்லடை செய்ய அரை மணி நேரம் ஆகும்]." முகமது பாய், சல்லடை செய்வதைப் பற்றிப் பேசும்போது, விரல் நுனியில் உள்ள வெட்டுத் காயங்களைக் கட்டை விரலால் வருடுகிறார். அவர் வேலை செய்யும் போது மீண்டும் விரல்களில் வெட்டுக்காயங்கள் ஏற்படலாம். ஆனால் காலமும் அனுபவமும் அவருக்கு அவற்றை பழக்கிவிட்டது. அவர் வித்தியாசமான ஹிந்தியில் பேசுகிறார். குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒரு வகை அது. அதில் குஜராத்தி வார்த்தைகள் தாராளமாக இடம்பெற்றிருக்கின்றன. “ஏக் மஹினா தக்லிஃப் படி மேரே கோ. அப் ஏக் நாங் பாஞ்ச் மினிட் மே பன் ஜாதா ஹை [சுமார் ஒரு மாதம் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது என்னால் ஐந்து நிமிடங்களில் ஒரு சல்லடையை தயாரிக்க முடியும். உத்தியை அறிந்தவுடன், என்னால் அதை வேகமாக செய்ய முடிந்தது.]," என்று அவர் புன்னகைக்கிறார்.
நாங்கள் அகமதாபாத்தில் உள்ள குத்பி கட்டிடத்திற்குள் 10 X 10 அறையில் அமர்ந்திருக்கிறோம். அது , 43 வயது முகமது சர்னாவாலா மற்றும் அவரது 76 வயதான அம்மி (தாயார்), ருக்கையா மௌஜ்ஹுசைனி ஆகியோரின் வீடு. அகமதாபாத்தின் கலுபூர் ஸ்டேஷன் அருகே தொழிலாளர் வர்க்க முஸ்லிம்கள் வசிக்கும் சால் என்ற டவுடி வோராவின் ரோசாவில் உள்ள இந்த இரண்டு மாடி கட்டிடத்தில் உள்ள 24 வீடுகளில் அவர்களது வீடும் ஒன்று. நவீனமாகத் தோற்றமளிக்கும் ரயில் நிலையத்தின் மறுபுறம் சென்றால், நீங்கள் ஒரு பழைய நகரத்தில் இருப்பதாக உணர்வீர்கள்.
சவாலான பாதைகள், உணவு, சண்டைகள் மற்றும் சச்சரவுகள், காற்றில் அவ்வப்போது பறக்கும் அசிங்கமான வார்த்தைகள் மற்றும் மெதுவாக நகரும் போக்குவரத்தின் வழியாக கடந்தால், நீங்கள் ஒரு சிக்கலான சாலை சந்திப்பை எதிர்கொள்வீர்கள் - ஒன்று குறுக்காகச் செல்கிறது, ஒன்று வலதுபுறம் வளைகிறது, ஒன்று இடதுபுறமாக முட்டுச்சந்திற்குள் திரும்புகிறது, மற்றும் ஒன்று வளைந்து, பின்னர் நேராகி, மற்றொரு சாலையில் ஒன்றிணைகிறது. இந்த சாலைதான், மொத்தம் 110 குடும்பங்கள் வசிக்கும் டவுடி வோராவின் ரோசாவில் உள்ள வோரா அறக்கட்டளைக்குச் சொந்தமான குத்பி கட்டிடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
முகமது பாய் இங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் நடந்து, வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நகரம் முழுவதும் தனது மர வண்டியை தள்ளிச் செல்கிறார். அவர் காலை ஆறு மணிக்கு தொடங்குகிறார். "அவருடைய அப்பா எங்கெல்லாம் சென்றார் தெரியுமா!" ருக்கையா, தன் கணவரை நினைவு கூர்ந்து, தன் துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறார். "அவர் ஆற்றைத் தாண்டி, சபர்மதியின் அந்தப் பக்கம் சென்று தாமதமாக இரவு 9 அல்லது 10 மணிக்குத் தான் திரும்புவார்." அப்பா மொய்ஜ் ஹுசைனி, பிப்ரவரி 2023-ல் காலமானார். அப்போது அவருக்கு வயது 79.


இடது: முகமது சர்னாவாலா. வலது: அவரது தாயார் ருக்கையா மொயிஸ் சர்னாவாலா


இடது: சல்லடைகளில் வைக்கப்படும் வலை அவரது சமையலறையின் தரை முழுவதும் உள்ளது. வலது: முகமது பாய், அவரது வேலையைச் சரிபார்க்கிறார்
இல்லை, முகமது பாய் தனது தந்தையிடமிருந்து தனது கைத்தொழிலைக் கற்றுக்கொள்ளவில்லை. "ஹோ கயி ஹிம்மத் தோ கர் லியா [தைரியமாக முயற்சி செய்து பார்த்தேன், கற்றுக்கொண்டேன்]," என்று அவர் கூறுகிறார். “அவர் வீட்டில், சல்லடைகளை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் உயிருடன் இருந்தபோது நான் ஒரு சல்லடையைக் கூட தொட்டதில்லை. அவர் வேலை செய்வதைப் பார்த்து கற்றுக்கொண்டேன் என்று நினைக்கிறேன். அவரது தந்தை தனது தாய் மாமாவின் டீக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் ஒரு சண்டைக்குப் பிறகு அவர் அந்த வேலையை விட்டுவிட்டு சல்லடை செய்யத் தொடங்கினார். "1974-ல் நாங்கள் சரஸ்பூருக்கு வந்ததிலிருந்து என் தந்தை தனது மர வண்டியுடன் வெளியே செல்வார்," அவர் இறக்கும் வரை அதே வேலையை தான் செய்தார் என முகமது பாய் நினைவு கூருகிறார்.
முகமது பாய், இந்த வேலைக்கு புதியவர். அவர் தனது தந்தை இறந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் தொடங்கினார். மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் இதைச் செய்கிறார். மற்ற நாட்களில் பெரிய யூனிட்களில் பயன்படுத்தப்படும் டீசல், பெட்ரோல், கேஸ் ஆகியவற்றுக்கான 200-250 கிலோ வால்வுகளை பெயிண்ட் செய்கிறேன். மதிய உணவுக்கு அரை மணி நேர இடைவெளியோடு, நான் காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை வேலைக்கு செல்கிறேன். ஒரு நாளைக்கு 400 ரூபாய் கிடைக்கிறது. சல்லடையை சரிபார்க்கும் பணி, அவருக்கு அதிக பணம் தருவதில்லை. “கோய் தின் சௌ ஆயே. கோயி தின் பஞ்ச் சௌ பி லேகே ஆயே. கோய் தின் நஹி பி லாயே. கோயி நக்கி நஹி [சில நாட்களில் 100 ரூபாய் கிடைக்கும், சில நாட்களில் 500 ரூபாய் கிடைக்கலாம், ஒருநாள் எதுவுமே இருக்காது. நிலையான வருமானம் என்று எதுவும் இல்லை," என்று அவர் கூறுகிறார்.
அப்படியானால் அவர் வாரத்தில் எல்லா நாட்களிலும் வால்வுக்கு பெயிண்ட அடிக்கும் வேலையை ஏன் செய்வதில்லை?
"நீங்கள் ஒரு சுயதொழிலில் இருந்தால், நீங்கள் வளரலாம், முன்னேறலாம். மற்றது வேலை செல்வது போலத் தான். அதாவது காலையில் சென்று இரவில் திரும்புவது.” அவர் சோர்வாகவும் அதே நேரத்தில் நம்பிக்கையுடனும் இருக்கிறார்.
"நான் 7-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் 8-ம் வகுப்பிற்கு கூட அனுமதிக்கப்பட்டேன். ஆனால் அதற்குள் கலவரம் வெடித்தது. அதன் பின்னர் என்னால் மீண்டும் பள்ளிக்குச் செல்லமுடியவில்லை. அப்போதிருந்து வேலை செய்ய துவங்கிவிட்டேன். ஒரு நாளைக்கு 5 ரூபாய்க்கு ப்ரைமஸ் அடுப்புகளை பழுது பார்க்கும் கடையில் வேலை செய்தேன். கம்பிகளை வெல்டிங் செய்து மண்ணெண்ணெய் பம்புகள் கூட செய்தேன். இப்படி நிறைய விஷயங்களைச் செய்தேன்,” என்று அவர் கூறுகிறார். சல்லடை சரிசெய்வதும் தயாரிப்பதும் அவரது சமீபத்திய முயற்சிகளாகும்.
அகமதாபாத் மற்றும் பிற நகரங்களில் சல்லடை பழுதுபார்ப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் முகமது பாய் போல் வீடு வீடாக இந்த சேவையை வழங்குபவர்கள் அதிகம் இல்லை. ”முதலில் என் தந்தை மட்டுமே அந்த வேலை செய்தார். இப்போது நான் செய்கிறேன். ரிப்பேர் சர்வீசிங் வண்டியை நடத்தும் வேறு யாரையும் எனக்குத் தெரியாது. யாரையும் பற்றி கேள்விப்பட்டதில்லை. யாரையும் பார்த்ததில்லை. நான் மட்டும்தான் இந்த வண்டியை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார்.
அவரது வண்டியில் வெவ்வேறு வலிமை மற்றும் தடிமன் கொண்ட இரும்பு வலைகள், சில பழைய சல்லடைகள், ஒரு உளி, சில ரிவெட்டுகள், ஒரு இடுக்கி, ஒரு பெரிய ஜோடி கத்தரிக்கோல், ஒரு ஜோடி சுத்தியல்கள் மற்றும் சுமார் மூன்றடி நீளமுள்ள ரயில் பாதையின் ஒரு துண்டு ஆகியவை உள்ளன. சில சமயம் குர்தா பைஜாமா, சில சமயம் கால்சட்டை, சட்டை, காலில் பழைய செருப்பு, முகத்தைத் துடைக்கத் தோளில் துண்டு என போன்றவற்றுடன் செல்லும் அவர், 100 கிலோ எடையுள்ள தனது வண்டியை நகரத்தின் வீதிகளில் தள்ளி செல்கிறார்.


சரஸ்பூர் வீதிகளின் வழியாக தனது பழுதுபார்க்கும் வண்டியைத் தள்ளிச் செல்லும் முகமது பாய்
ஒரு சல்லடை செய்வதற்கு, சந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை செல்ல வேண்டும். முகமது பாய் முதலில் சந்தையில் இருந்து ஒரு தகரப்பாயை வாங்குகிறார். பின்னர் விரும்பிய நீள அகலத்திற்கு ஏற்ப அதை வெட்டுகிறார். பின்னர் அந்த தகரப்பாய்களை அழுத்துவதற்காக சந்தைக்கு எடுத்துச் செல்கிறார். அவற்றை மடித்து, தட்டையான கம்பிகளை தயார் செய்கிறார். அவர் 'அழுத்துவதற்கான இடம்' என்று அழைக்கும் இடம், இரும்புத் தாள்களை வெட்டி, அழுத்தும், ஒரு சிறிய கடை மட்டுமே.
வீட்டில் அவர் கம்பிகளில் ஒரு இணைப்புடன் இரண்டு ரிவெட்டுகளை சரிசெய்து, பின்னர் அவர் மீண்டும் சந்தைக்குச் செல்கிறார். இந்த முறை "கோர்-கண்டோரோ" - அவர்கள் சல்லடைக்கான சட்டத்தையும் பிடியையும் தயார் செய்யும் செயல்முறையை நிறைவு செய்கிறார். வீட்டிற்கு வந்ததும், அவர் நெய்யப்பட்ட கம்பி வலை மற்றும் ரிவெட்டுகளை இப்போது சல்லடையின் வட்டமான சட்டத்தில் பொருத்துகிறார்.
“நீங்கள் பாப்கார்ன், பொரி, வறுத்த கடலை மற்றும் பாக்கு ஆகியவற்றிற்கு ஒரு அகண்ட வலை பயன்படுத்துவீர்கள். அத்தகைய அகண்ட வலையை 'எண்.5’ என்று கூறுவோம். கோதுமை, அரிசி, தினை மற்றும் எல்லாவற்றுக்கும் பயன்படும். மற்ற அனைத்தும் ‘ரன்னிங் ஐட்டம்,” என்று முகமது பாய் ஒரு பெரிய சல்லடையை என் முன் வைத்துப் பேசுகிறார். “புதிய சல்லடைகளை 70 ரூபாய்க்கும், பழைய சல்லடைகளை நாற்பது அல்லது நாற்பத்து ஐந்து ரூபாய்க்கும் சரி செய்யலாம். இது எல்லாமும் வலையின் தரத்தைப் பொறுத்தது.”
அதன் அளவிற்கு அடுத்து, வலையின் தரம், சல்லடையை அடையாளம் காண்பதற்கான மற்றொரு வழி, என்று அவர் விளக்குகிறார். "அவை பல்வேறு அளவுகளில் வரலாம் - 10', 12', 13', 15' அல்லது 16' விட்டத்திலும் மற்றும் ஒவ்வொன்றிலும் அவை வெவ்வேறு தரமான வலைகளைக் கொண்டிருக்கலாம்," என்று அவர் விளக்குகிறார்.
30 மீட்டர் நீளமுள்ள ஒரு கம்பி வலையின் விலை சுமார் 4000 ரூபாய். ரன்னிங் ஐட்டம் மற்றும் சாதாரண சல்லடைகளுக்கு 10 முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கிறேன். எண். 12க்கு நான் 70 அல்லது 80 ரூபாய் வசூலிக்க முடியும். இவை யாவும் வாடிக்கையாளரைப் பொறுத்தது. சிலர் எனக்கு 90 அல்லது 100 ரூபாய் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு சில மாதங்களுக்கும் மூலப்பொருட்களுக்கு அவர் ரூ.35,000 செலவிடுகிறார். அவரது மாத வருமானம் ஆறிலிருந்து ஏழாயிரம் ரூபாய் ஆகும். அவர் பெருமூச்சுடன், செலவுகள் அதிகம், என்று கூறுகிறார், "நாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம். இருந்தாலும் நான் வீட்டிற்கு கொண்டு வரும் எல்லாமும் எங்களுக்கே சரியாகி விடுகிறது." பிறகு சட்டென்று சிரித்துவிட்டு, “ஞாயிறு அன்று நான் எங்கும் வேலைக்குச் செல்வதில்லை. ஒரு நாள் நான் ஓய்வெடுக்கிறேன்.

அகமதாபாத்தின் பாபுநகரில் உள்ள அனில் ஸ்டார்ச் சாலையில் வீட்டுக்கு வீடு பழுதுபார்க்கும் சேவை வண்டியுடன் முகமது பாய்

'முதலில் என் அப்பா மட்டும் தான் இதை செய்தார், இப்போது நான். பழுதுபார்க்கும் சேவை வண்டியை வேறு யாரும் இயக்கியதாக எனக்குத் தெரியவில்லை,' என்கிறார்

வாரத்தில் மூன்று நாட்கள் என, அவர் தனது வீட்டிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் நடந்து, நகரத்திற்குள் தனது மர வண்டியை தள்ளுகிறார்

முகமது பாய்க்கு சல்லடைகளை பழுதுபார்ப்பதில் இருந்து கிடைக்கும் வருமானம் கொஞ்சம் மட்டுமே. 'சில நாட்களில் 100 ரூபாய் கிடைக்கும், சில நாட்களில் 500 ரூபாய் கிடைக்கலாம், ஒருநாள் எதுவுமே இருக்காது. நிலையான வருமானம் என்று எதுவும் இல்லை'

சல்லடைகளை பழுது பார்ப்பதில் இருந்து முகமது பாய்க்கு கிடைக்கும் வருமானம் வாடிக்கையாளர்களைப் பொறுத்தது. 'எண். 12க்கு, நான் 70 அல்லது 80 ரூபாய் வசூலிக்கலாம். இவை யாவும் வாடிக்கையாளரைப் பொறுத்தது. எனக்கு 90 அல்லது 100 ரூபாய் கொடுக்கவும் சிலர் தயாராக இருக்கிறார்கள்

தகரப்பாய்களை மடித்து அழுத்தும் எழுபத்தைந்து வயதான ஷபீர் எச். தஹோத்வாலா

முகமது பாய்
சர்னாவாலா, 'நான் ஞாயிற்றுக்கிழமை எங்கும் வேலைக்குச் செல்வதில்லை. ஒரு நாள் ஓய்வெடுக்கிறேன்'
தமிழில்: அகமது ஷ்யாம்