மேற்கு காமெங் மற்றும் தவாங் மாவட்டத்தின் ப்ரோப்கா இன மக்கள் மோன்பா எனப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அடிப்படையில் நாடோடிகள். ஆனால், ஒவ்வொரு காலத்திலும் சரியாக ஒவ்வொரு பகுதிக்கு இடம்பெயர்வார்கள். கடல் மட்டத்தில் இருந்து 9000 அடி முதல் 15,000 அடி வரை இவர்களின் பயணம் அமையும். நீண்ட குளிர்காலங்களில் அதாவது அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் அவர்கள் குறைந்த உயரத்திலும், மே முதல் செப்டம்பர் இடைப்பட்ட மழை மற்றும் கோடை காலங்களில் இன்னும் அதிக உயரமான இடங்களிலும் அவர்கள் இடம்பெயர்கின்றனர்.
நவம்பர் 2016-ல் ஒரு காலைப் பொழுதில் நான் மேற்கு காமெங்கில் உள்ள தெமாங் கிராமத்துக்குப் பயணப்பட்டேன். தெமாங் கடல்மட்டத்தில் இருந்து சரியாகா 7,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 60 வீடுகள் உள்ளன. எல்லாவற்றிலும் மோன்பா இனத்தினர் உள்ளனர். அங்கிருந்து அருகாமையில் இருக்கும் ஊர் திராங். தெமாங்கில் இருந்து சரியாக 26 கிலோமீட்டர் தூரத்தில் திராங் உள்ளது.
அடுத்த நாள் நான் லகாம் சென்றேன். அது ப்ரோப்கா மக்கள் குளிர் காலத்தில் தங்கும் இடம். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் உள்ள லகாமுக்குச் செல்ல நான் 11 கிலோமீட்டர் பயணப்பட்டேன். 8 மணி நேரம் அடர்வனத்தின் ஊடே பயணித்தேன். அங்கு நான் சென்று சேர்ந்தபோது மணி மாலை 6-ஐ தொட்டிருந்தது. ப்ரோப்கா மேய்ப்பரான 27 வயது பெம் ஷேரிங் எனை புன்னகையுடன் வரவேற்றார்.
அடுத்த நாள் காலை நான் லகாம் ப்ரோப்கா நாடோடிகளின் குளிர்கால வாசஸ்தலம் என்பதை உணர்ந்தேன். அங்கே ஒரு சிறிய மடம் இருந்தது. கற்களாலும் மூங்கிலாலும் கட்டப்பட்டு தகரத்தால் கூரை வேயப்பட்ட அங்கிருந்த 8 முதல் 10 வீடுகளில் சுமார் 40 முதல் 45 குடும்பங்கள் இருந்தன. நவம்பர் மாதத்தில் இந்த குக்கிராமம் நிரம்பிக் காணப்படும். ஏனெனில் மேய்ச்சல் நிலங்களுக்குச் சென்றவர்கள் குளிர் கருதி இங்கே இறங்கிவிடுகின்றனர். அதேவேளையில் மே மாதம் முதல் செப்டம்பர் வரையில் இப்பகுதி கிட்டத்தட்ட ஆள் அரவமற்றுக் கிடக்கிறது. அந்த காலக்கட்டத்தில் இளைஞர்கள் தங்களின் குதிரைகளையும் காட்டு எருதுகளையும் இன்னும் சற்றும் உயரமான இடத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். அங்குதான் மாகோ கிராமம் உள்ளது. முதியவர்கள் லாகம் பகுதியிலேயே தங்கிவிடுகின்றனர்.
ஷேரிங்குடனும் இன்னும் சில ப்ரோப்கா மக்களுடனும் நான் சில காலத்தைக் கழித்தேன். "கோடை காலத்தில் மேய்ச்சல் நிலங்களைத் தேடி நாங்கள் மாகோவுக்கு இடம் பெயர்வோம். அது காட்டுவழிப் பயணதான். 4 முதல் 5 நாட்கள் தொடர்ந்து நடக்க வேண்டியிருக்கும். இரவு மட்டும்தான் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்" என்று பெம் கூறினார்.
வடகிழக்கு இந்தியாவையும் திபெத் நாட்டினுடனான சர்ச்சைக்குரிய மெக்மாகோன் எல்லையை ஒட்டி 11,800 அடி உயரத்தில் உள்ளது மாகோ.கோடை காலங்களில் ப்ரோப்கா மக்கள் இதைவிட இன்னும் அதிகமான உயரத்துக்குக்கூட செல்கின்றனர். அவர்களின் வழித்தடம் லாகம், துங்ரி, சாங்லா, நியாங், போடோக், லுர்திம் ஊடே மாகோவை அடைகிறது.
மற்றவர்கள் சாலை வழியாக வர வேண்டும் என்று விரும்பினால் அந்தப் பயணம் தவாங்கில் இருந்து தொடங்க வேண்டும். இந்தப் பகுதியைச் சாராத இந்தியர்கள் இங்கு ஒரே ஒரு நாள் தங்கவேண்டும் என்றாலும் கூட அதற்காக இந்திய ராணுவத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். எல்லைப் பிரச்சினை காரணமாக இந்த கெடுபிடி அமலில் உள்ளது. இதனாலேயே மாகோவுக்கு இடம்பெயரும் ப்ரோப்கா மக்கள் தவறாமல் தங்களுடன அரசாங்கம் அளித்த அடையாள அட்டைகளைக் கொண்டு செல்கின்றனர்.
ப்ரோப்காவின் அன்றாட வாழ்வை எளிமையானது அழகானது. "அவர்களின் வருமானத்தின் ஆதாரமே காட்டு எருதுகள் தான். அவற்றிடம் இருந்து பாலை சேகரித்து வெண்ணெய், பாலாடைக்கட்டிகள் தயாரிக்கின்றனர். அதனை உள்ளூர் சந்தைகளில் விற்கின்றனர். அங்கு இன்னமும் பண்ட மாற்று முறை அமலில் உள்ளது. தங்களைவிட உயரம் குறைவான பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் என்பதால் அவர்களிடம் காட்டு எருதுகளையும் பால் பொருட்களையும் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலான விவசாயப் பொருட்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்" என்றார் பெமா வாங்கே. பெமா வாங்கேவின் ஊர் தெம்பாங் கிராமம். அவர் டபிள்யு டபிள்யு எஃப்-ஃபொன் இந்தியாவிற்கான மேற்கு அருணாச்சலப்பிரதேச திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். "எங்களுக்கும் ப்ரோப்காக்களும் இடையேயான இணைப்பு உணவு தான். நாங்கள் பாபு பிரிவினர் அவர்களிடம் சோளம், பார்லி, கோதுமை, காய்ந்த மிளகாய் ஆகியனவற்றைத் தருகிறோம். அவர்களிடமிருந்து வெண்ணெய், காட்டு எருது இறைச்சி ஆகியனவற்றைப் பெற்றுக் கொள்கிறோம் " என்று விவரித்தார்.
அங்கு பெரும்பகுதி மேய்ச்சல் நிலத்தின் மீது ராயல் பாபு குடும்பத்தினர் அதிகாரம் செலுத்துகின்றனர். அந்த மேய்ச்சல் நிலத்தை மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்த வரி வசூலிக்கின்றனர். இந்த வரி செம்மறி ஆடுகளாகவோ அல்லது வெண்ணெய்யாகவோ பெறப்படுகிறது. ஆனால் "லாகம் பகுதியைச் சேர்ந்த ப்ரோப்கா மட்டும் இந்த வரியைச் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் லாகம் மக்களின் கடவுளான லாகம் லாமாவை (அதாவது அங்கிருக்கும் ஒரு பாறையை) பாதுகாப்பதால் விலக்கு அளிக்கப்படுகிறது" என்றார் வாங்கே.
அக்டோபர் இடைப்பட்ட காலத்தில் ப்ரோப்கா மக்கள் தங்களின் கோடை கால மேய்ச்சல் நிலத்தில் இருந்து கீழே இறங்கிவிடுவார்கள். பெம் கூறும்போது, "நாங்கள் காட்டுவழிப் பயணத்தின் போது விலங்குகளை மேய்ச்சலுக்கு விடுவதோடு தேவையான விறகுகளையும் சேகரித்துக் கொள்கிறோம். வனம் தான் எங்களின் அன்னை" என்றார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள தெமாங் கிராமத்தைச் சேர்ந்த மோன்பா ஜங்மு இஹோபா, சோளத்தை உலர்த்திக் கொண்டிருக்கிறார். இந்தப் பழங்குடிகளின் முக்கிய வாழ்வாதாரம் இதுதான்

மேற்கு காமெங் மாவட்டத்தில் ஓர் உயரமான மட்டத்தில் காட்டெருதுவிடமிருந்து பால் கறக்கிறார் பெம் ஷேரிங். இந்த விலங்குகள் உண்மையில் காட்டெருது மற்றும் பிற கால்நடைகளின் கலப்பினம் என்றே சொல்ல வேண்டும். இதை ட்சோ என்றழைக்கிறார்கள். தினமும் இருவேளை பால் கறக்கிறார்கள்

ப்ரொக்கா மக்கள் பெரும்பாலும் அரிரி உணவை சாப்பிடுகிறார்கள். (இவற்றை மலையின் கீழே உள்ள பகுதிகளில் இருந்து வாங்கி வருகின்றனர்). அரிசியுடன் காட்டெருது இறைச்சியும் உண்கின்றனர். இதுதவிர உருளை சாப்பிடுகின்றனர். இவர்கள் வாழும் பகுதி வேறு விதமான காய்கறிகளை விளைவிக்கும் வகையில் செழிப்பானதாக இல்லை

ப்ரோப்கா சமையலறையில் எப்போதுமே நெருப்பு அணையாமல் இருக்கிறது. இதுதான் அவர்களை மிகக்கொடூரமான குளிர் காலத்தில் கதகதப்பாக வைத்துள்ளது

லகாமில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சந்தேர் கிராமத்திற்கு தனது பயணத்தைத் தொடங்குகிறார் ப்ரோப்கா ஒருவர்

ப்ரோப்கா மேய்ச்சல்காரர்கள் அடிக்கடி மலைப்பிரதேசத்தின் மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் பயணப்படுகின்றனர். அப்படிப் பயணபப்டும் போதெல்லாம் தங்களுடன் தேவையான பொருட்களைக் கொண்டு செல்கின்றனர். ஏற்கெனவே தங்கள் இனத்தவரால் குறிக்கப்பட்ட இடங்களில் உருவாக்கப்பட்ட நிரந்தரக் குடியிருப்புகளுக்கிடையே பயணப்படுவது அவர்களுக்கு இயல்பானதாக இருக்கிறது

குளிர்கால வசிப்பிடமான லகாமில் ப்ரோக்பா மேய்ச்சல்காரர் ஒருவர் பாரம்பரிய முறைப்படி வெண்ணெய் தயாரிக்கிறார். அத்துடன் சுர்பியும் தயாரிக்கின்றனர். இவை இரண்டுமே ப்ரோப்கா குடுமத்தினரின் வாழ்வாதாரமாக இருக்கிறது

பெம்மின் சகோதரி டஷி காட்டெருது சாணத்தை சேகரிக்கிறார். அந்த சாணம் மூலம் எருவாட்டி தட்டி அதனை சமையலறைக்குத் தேவையான எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். கடும் குளிர் காலத்தில் வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸ்க்கு கீழே செல்லும்போது இதுமட்டும் தான் எரிபொருள் ஆதாரமாக இருக்கிறது

லகாம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் போதிய உபகரணங்கள் இல்லாததால் மூடப்பட்டுள்ளது. தெம்பாங் கிராமக் குழந்தைகள் உண்டு உறைவிடப் பள்ளியில் தான் தங்கி ஆரம்ப கல்வி கற்கின்றனர். அங்கு நடந்து செல்ல வேண்டுமானால் காட்டுவழியில் 11 கிலோமீட்டர் பயணப்பட வேண்டும்

ப்ரோக்பாக்கள் புத்தமதத்தை பின்பற்றுகின்றனர். லகாமில் பிரார்த்தனைகளுக்காக ஒரு சிறு மடம் உள்ளது. அது கோம்பா என அழைக்கப்படுகிறது

காட்டுப்பகுதியில் இருந்து மூங்கில் சேகரித்துத் திரும்புகின்றனர். ப்ரோக்பாக்களின் அன்றாட வாழ்க்கையில் மூங்கில் பயன்பாடு இன்றியமையாதது. மூங்கில் கொண்டே தற்காலிக சமையலறைகளை அமைக்கின்றனர். மேலும் சில வீட்டு உபயோகப் பொருட்களையும் உருவாக்குகின்றனர்

ப்ரோப்காக்களின் இன உணர்வு வலிமையானது. அவர்கள் அடிக்கடி தங்கள் இனத்தாரின் வெவ்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்கு உறவுகள், நட்புகளை சந்திக்கும் நிமித்தமாகப் பயணபப்டுகின்றனர்
தமிழில்: மதுமிதா