அசாமிய கோல் டிரம்கள், பெங்காலி கோலை விட குறைந்த (பாஸ்) ஒலி வடிவைக் கொண்டுள்ளன. தோலானது, நெகேராவை விட உயர்ந்த ஸ்ருதியைக் கொண்டுள்ளது. தாளவாத்தியங்களைத் தயாரிக்கும், கிரிபாட் பத்யோகர், இதனை நன்கு அறிவார். அந்த அறிவை அவர் தனது அன்றாட வேலைகளில் பயன்படுத்துகிறார்.
“இளம் சிறுவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை காமித்து, வாத்தியத்தின் டியூனிங்கை சரிசெய்யச் சொல்கிறார்கள்,” என்கிறார் அஸ்ஸாமில் உள்ள மஜூலியைச் சார்ந்த இந்த மூத்த கைவினைஞர். "எங்களுக்கு எந்த செயலியும் தேவையில்லை."
ட்யூனர் செயலியிலும், இது ஒரு சோதனை செயல்முறை தான் என்று கிரிபாட் விளக்குகிறார். தாள வாத்தியத்தின் தோல் சவ்வு, சரியாக சீரமைக்கப்பட்டு இறுக்கப்பட வேண்டும். "அப்போதுதான் இந்த ட்யூனர் செயலியும் கூட வேலை செய்யும்."
கிரிபாட் மற்றும் அவரது மகன் பொடூம் இருவரும், பத்யோகர்களின் (அல்லது பத்யகர்கள்) வம்சாவளியில் வந்தவர்கள். இவர்கள் துலி அல்லது சப்தாகர் என்றும் அழைக்கப்படுவர். இசைக்கருவிகள் தயாரிப்பதற்கும் பழுது பார்ப்பதற்கும் பெயர் பெற்ற இந்த சமூகம், திரிபுரா மாநிலத்தில் ஒரு பட்டியல் சாதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பொடூம் மற்றும் கிரிபாட், பொதுவாக டோல், கோல் மற்றும் தபலாவை உருவாக்குகின்றனர். " சத்ராக்கள் இங்கு இருப்பதால், எங்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும்" என்று பொடூம் கூறுகிறார். "இதனால் எங்களால் போதுமான அளவு சம்பாதிக்க முடிகிறது."


இடது: அஸ்ஸாமின் மஜூலியில் உள்ள தனது சொந்த கடையில் பொடூம் பத்யோகர் அமர்ந்திருக்கிறார். வலது: பழுதுபார்ப்பதற்காக வந்த நெகேராக்கள் மற்றும் சிறிய டோல்கள் அலமாரிகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
ஃபாகுன் மாதம் (பிப்ரவரி-மார்ச்) மற்றும் மிஸிங் (அல்லது மிஷிங்) சமூகத்தின் அலி அய் லிகாங் வசந்த விழா நடைபெறும் திருவிழாக் காலங்களில், வருமானம் களை கட்டுகிறது. திருவிழாவின் போது நிகழ்த்தப்படும் கும்ராக் நடனத்திற்கு, டோல்கள் மிக முக்கிய அங்கமென்பதால், சோட் மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) புதிய டோல்களுக்கான தேவை மற்றும் பழைய டோலை சரிசெய்யும் வேலை அதிகரிக்கிறது. வசந்த காலத்தில், மாநிலத்தின் முக்கிய பண்டிகையான போஹாக் பிஹு கொண்டாட்டமும் டோல்களுக்கான தேவையை அதிகரிக்கிறது.
பத்ரோ மாதத்தில் நெகராக்கள் மற்றும் கோல்களின் தேவை அதிகரிக்கிறது. ராஸ் முதல் பிஹு வரை, அசாமிய கலாச்சார நிகழ்வுகளில், தாளவாத்தியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அஸ்ஸாமில் ஆறு வகையான டிரம்ஸ்கள் இருப்பதாக அறியப்படுகிறது, அவற்றில் பல இங்கு மஜூலியில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு: ராஸ் மஹோத்ஸவ் மற்றும் மஜூலியின் சத்ராக்கள்
ஏப்ரல் வெயிலையும் பொருட்படுத்தாமல், தனது கடைக்கு வெளியே அமர்ந்து, பொடூம், மாட்டுத்தோலில் இருந்து முடியை அகற்றுகிறார். அது தபேலா, நெகேரா அல்லது கோலுக்கு , தோல் சவ்வு அல்லது தாலியாக மாறும். பிரம்மபுத்திராவின் மஜூலி தீவில் உள்ள ஐந்து இசைக்கருவி கடைகளும் புலம்பெயர்ந்த வங்காள சமூகத்தைச் சேர்ந்த பத்யோகர் குடும்பங்களால் நடத்தப்படுகின்றன.
"தான் எப்படி கவனித்துக் கற்றுக்கொண்டாரோ, அதே போலத் தான் நானும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று என் தந்தை கூறுகிறார்," என்று 23 வயதான பொடூம் கூறுகிறார். “ஹடோட் தோரி ஜிகை நிடியே [கைகளை பிடித்து கற்றுக் கொடுத்ததில்லை]. என் தவறுகளை கூட அவர் திருத்துவதில்லை. நானே கவனித்து திருத்திக்கொள்ள வேண்டும்.”
பொடூம் மும்முரமாக சுத்தம் செய்து கொண்டிருக்கும் மாட்டுத் தோலின் விலை ரூ.2,000 ஆகும். முதல் படி, ஃபுட்சை (அடுப்பு சாம்பல்) அல்லது காய்ந்த மணலைப் பயன்படுத்தி, அதிலுள்ள முடியை அகற்ற வேண்டும். பின்னர் அது பொட்டாலி எனப்படும் தட்டையான முனைகள் கொண்ட உளியால் சீராக்கப்படுகிறது.

பொடூம், மாட்டுத்தோலில் உள்ள முடியை சாம்பல் மற்றும் தட்டையான முனைகள் கொண்ட உளியால் அகற்றி சீரமைக்கிறார்
எக்டேரா எனப்படும் வளைந்த டாவோ பிளேடைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தப்பட்ட தோலில் இருந்து வட்டமாக ஒரு துண்டு வெட்டப்படுகிறது. இவை தாலி [தோல் சவ்வு] ஆக மாற்றப்படும். "கருவியின் உடலில், தாலியை கட்டும் கயிறுகளும் தோலால் தான் செய்யப்படுகின்றன" என்று பொடூம் விளக்குகிறார். "இது இளம் மாட்டிலிருந்து வருவதால், மென்மையாகவும் சீராகவும் உள்ளது."
சியாஹி (தாலியின் மையத்தில் உள்ள வட்டமான கருப்புப் பகுதி) வேகவைத்த அரிசியுடன் தூள் செய்யப்பட்ட இரும்பு அல்லது கூன் சேர்க்கப்பட்ட மாவால் செய்யப்படுகிறது. தனது உள்ளங்கையில் ஒரு சிறிய குவியலை காண்பித்து "இது [ கூன் ] ஒரு இயந்திரத்தில் தயாரிக்கப்படுகிறது," என்கிறார். "உள்ளூர் கொல்லர்களிடம் இருந்து பெறும் கூன் கரடுமுரடாகவும், செதில் செதில்ளாகவும், மற்றும் கைகளை காயப்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையை விட இது சிறந்தது."
இந்த இளம் கைவினைஞர், நிருபரின் உள்ளங்கையில் அடர் சாம்பல் நிற கூன்னைத் தருகிறார். அளவில் குறைவாக இருந்தாலும், இந்த தூள், வியக்கத்தக்க வகையில், அதிக கனமாக உள்ளது.
தாலியில் கூன் கூடுதல் கவனத்துடன் பூசுப்படுகிறது. ஒரு அடுக்கு வேகவைத்த அரிசியைப் பூசி வெயிலில் காய வைப்பதற்கு முன் கைவினைஞர்கள் தாலியை 3-4 முறை சுத்தம் செய்கிறார்கள். அரிசியில் உள்ள மாவுச்சத்து தாலிக்கு ஒட்டும் தன்மையைத் தருகிறது. தாலி முழுவதுமாக காய்வதற்கு முன், ஒரு அடுக்கு சியாஹி பூசப்படுகிறது. பின்னர் ஒரு கல்லைப் பயன்படுத்தி, தோலின் மேற்பரப்பு பாலிஷ் செய்யப்படுகிறது. ஒவ்வொரு அடுக்குக்கும் இடையில், 20-30 நிமிட இடைவெளி என, மூன்று முறை இந்த செயல்முறை செய்யப்படுகிறது. பின்னர் ஒரு மணி நேரம் நிழலில் காய வைக்கப்படுகிறது.
“முற்றிலுமாக காயும் வரை, அதனை தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பாரம்பரியமாக, இது 11 முறை செய்யப்படுகிறது. மேகமூட்டமாக இருந்தால், இந்த செயல்முறை முடிய ஒரு வார காலம் கூட ஆகும்.”


இடது: வளைந்த டாவோ பிளேடு, இரண்டு வெவ்வேறு பொட்டாலிகள் (தட்டையான முனைகள் கொண்ட உளி) மற்றும் ஒரு திருப்புளி ஆகியவை கைவினைஞர்களால் பயன்படுத்தப்படும் சில கருவிகளாகும். வலது: தாலியின் வட்டப் பகுதியை வரைவதற்குப் பயன்படுத்தப்படும் தூள் செய்யப்பட்ட இரும்பு அல்லது கூன், பார்ப்பதை விட கனமானது


கிரிபாட் மற்றும் பொடூம், உருவாக்கும் கருவிகளுக்கு ஏற்றவாறு, தோலில் இருந்து சிறிய தாள்களை வெட்டுகின்றனர். தோல் தயார் செய்வதற்குத் தேவையான பல பொருட்களை இந்த டூல்பாக்ஸ் கொண்டுள்ளது: அவை, பல வகையான உளிகள், கத்திகள், ஒரு சுத்தியல், மரச்சுத்தி, கற்கள் மற்றும் உப்புத்தாள் ஆகும்
*****
நான்கு சகோதரர்களில் இளையவரான கிரிபாட், 12 வயதிலேயே குடும்ப வியாபாரத்தைக் கவனிக்க தொடங்கிவிட்டார். அப்போது அவர் கொல்கத்தாவில் வசித்து வந்தார். அவரது பெற்றோர்கள் அடுத்தடுத்து இறந்த போனதால், அவர் தனிமையில் வாடினார்.
"அந்த சூழ்நிலையில் இந்த கைவினைக்கலையை கற்றுக்கொள்ள மனம் வரவில்லை," என்று நினைவு கூரும் அவர், சில வருடங்கள் கழித்து ஆர்வம் தொற்றிக்கொண்டதும், அஸ்ஸாமுக்கு இடம் பெயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் டோல்கள் தயாரிக்கும் கடையில் வேலை செய்து வந்தார். பின்னர் சில வருடங்கள் மரத்தூள் ஆலையில் பணி, அதற்குப் பின்னர் மரம் வெட்டும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். மழைக்காலங்களில் சேறு நிறைந்த சாலைகள் வழியாக மரக்கட்டைகள் நிரப்பப்பட்ட லாரிகள் கீழ்நோக்கிச் செல்லும் ஆபத்தான பயணங்களில், "என் கண்களுக்கு முன்னாலேயே பல மரணங்களைக் கண்டேன்," என்று அவர் நினைவு கூர்கிறார்.
மீண்டும் அவர் இந்த கைவினைத்கலையை கையில் எடுத்து, ஜோர்ஹாட்டில் 10-12 ஆண்டுகள் பணியாற்றினார். அவரது மூன்று மகள்களும் ஒரு மகனும் அங்கு தான் பிறந்தனர். கடனாகப் பெற்ற தோலைத் திரும்பப் பெறுவதில் சில அசாமிய சிறுவர்களுடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. அச்சிறுவர்களை, குண்டர்கள் என அடையாளம் கண்ட உள்ளூர் காவல்துறையினர், மேலும் பிரச்சினைகள் வராமல் தவிர்க்க, அவரை வேறு இடத்தில் கடை போடுமாறு அறிவுறுத்தினர்.
"நாங்கள் வங்காளிகள் என்பதால், அவர்கள் கும்பலாகச் சேர்ந்து, வகுப்புவாதமாக பிரச்சினையாக இது மாறினால், என் உயிருக்கும் என் குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்று எனக்கும் தோன்றியது," என்று அவர் கூறுகிறார். "எனவே நான் ஜோர்ஹாட்டை விட்டு [மஜூலிக்கு] இடம் பெயர முடிவு செய்தேன்." மஜூலியில் பல சத்ராக்கள் (வைஷ்ணவ மடங்கள்) நிறுவப்பட்டுள்ளதால், சத்திரிய சடங்குகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கோல் டிரம்ஸ் தயாரிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் நிலையான வேலையைப் பெறமுடிந்தது.
"இந்த இடம் ஒரு காலத்தில் காடாக இருந்தது, சுற்றி கடைகள் ஏதும் பெரிதாக இல்லை." அவர் தனது முதல் கடையை பலிச்சாபோரி (அல்லது பாலி சாபோரி) கிராமத்தில் திறந்தார், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதை கரமுருக்கு மாற்றினார். 2021 ஆம் ஆண்டில், முதல் கடையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், நயா பஜாரில், சற்று பெரிய இரண்டாவது கடையைத் திறந்தார்.


இடது: சுற்றி பல இசைக்கருவிகளோடு, ஒரு டோபா (பச்சை நூலால் கட்டப்பட்டது) பழுதுக்காக தரையில் வைக்கப்பட்டுள்ளது. வலது: களிமண்ணால் செய்யப்பட்ட பெங்காலி கோல்கள் (நீல நிறத்தில் உள்ளவை). இவை மரத்தால் செய்யப்பட்ட அசாமிய கோல்களை விட (பின்னால் உள்ள, உயரமானவை) அதிக ஸ்ருதியைக் கொண்டது
கடையின் சுவர்களை வரிசையாக வைக்கப்பட்ட கோல்கள் அலங்கரிக்கின்றன. களிமண்ணில் இருந்து தயாரிக்கப்படும் பெங்காலி கோல்கள் , மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்படுகின்றன, இதன் விலை அளவின் அடிப்படையில் ரூ.4,000லிருந்து தொடங்குகிறது. அதே சமயம், அசாமிய கோல்கள் , மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. பயன்படுத்தப்படும் மரத்தைப் பொறுத்து, டோல்களின் விலை ரூ.5,000லிருந்து தொடங்குகிறது. தோலை மாற்றி, அதை மீண்டும் இறுக்கிக் கட்டுவதற்கான விலை ஒரு வாடிக்கையாளருக்கு சுமார் ரூ.2,500 ஆகும்.
மஜூலியில் உள்ள நம்கர்கள் (இறை இல்லங்கள்) ஒன்றிற்குச் சொந்தமான தோபா , கடையின் தரையில் வைக்கப்பட்டுள்ளது. இது பழைய மண்ணெண்ணெய் டிரம்மில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சில தோபாக்கள் பித்தளை அல்லது அலுமினியத்தால் செய்யப்பட்டவை. "அவர்கள் எங்களையே டிரம்மை தேடி எடுத்து, தோபாவைச் செய்யச் சொன்னாலும், நாங்கள் செய்கிறோம். இல்லையெனில், வாடிக்கையாளர்களே டிரம்மைக் கொண்டு வரும்போது, நாங்கள் அதில் தோலை மட்டும் இறுக்கிக்கட்டித் தருவோம்,” என்று பொடூம் கூறுகிறார். இது இப்போது பழுதுபார்ப்பதற்காக கடைக்கு வந்துள்ளது.
"சில நேரங்களில் தோபாவை சரிசெய்வதற்கு நாங்களே, சத்ராவிற்கும் , நம்கருக்கும் செல்ல வேண்டி இருக்கும்," என்று அவர் மேலும் விளக்குகிறார். “முதல் நாள் நாங்கள் சென்று அளவீடுகளை எடுத்துக் கொள்வோம். அடுத்த நாள் தோலுடன் சென்று சத்ராவிலேயே பழுது பார்த்துவிடுவோம். இதற்கு எங்களுக்கு ஒரு மணி நேரம் ஆகும்.
தோல் தொழிலாளர்களிடம் பாகுபாடு காட்டுவது என்பது ஒரு நீண்ட கால வரலாறு. “டோல் வாசிப்பவர்கள் அதனை வாசிக்க விரல்களில் எச்சிலைப் தடவுவார்கள். குழாய்க் கிணற்றின் வாஷரும் தோலில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது,” என்கிறார் கிரிபாட். “எனவே ஜாத்-பாட்டின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது தர்க்கமற்றது. தோலை உபயோகிக்க தடை செய்வது தேவையற்றது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நயா பஜாரில் ஒரு துண்டு நிலம் வாங்கி, அவர்களுக்கென ஒரு வீட்டைக் கட்டியுள்ளனர். அவர்கள் மிஸிங், அசாம், தியோரி மற்றும் பெங்காலி மக்களைக் கொண்ட ஒரு கலப்பு சமூகத்தில் வாழ்கின்றனர். அவர்கள் எப்போதாவது பாகுபாட்டை எதிர்கொண்டார்களா? “நாங்கள் மொணிதாஸ் சமூகத்தவர். மாட்டைத் தோலுரிக்கும் ரபிதாஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது கொஞ்சம் பாகுபாடு காட்டப்படுகிறது. ஆனால் வங்காளத்தில் அதிகமாக இருக்கும் சாதி அடிப்படையிலான பாகுபாடு போன்று இங்கு இல்லை” என்று கிரிபாட் பதிலளிக்கிறார்.
*****
பத்யோகர்கள், ஒரு முழு மாட்டுத் தோலை, பொதுவாக ஜோர்ஹாட்டின் ககோஜனில் உள்ள முஸ்லீம் வர்த்தகர்களிடமிருந்து, சுமார் 2,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்குகின்றனர். அருகிலுள்ள லக்கிம்பூர் மாவட்டத்தில் கிடைக்கும் தோல்களை விட இங்கு விலை அதிகம், ஆனால் தரமானவை. "அவர்கள் தோல்களில் உப்பைக் கொண்டு பதனிடுவதால், அது தோலின் ஆயுளைக் குறைக்கிறது" என்று பொடூம் கூறுகிறார்.


இன்றைய கால கட்டத்தில், டோலுக்கான தோல்களை வாங்குவது மிகவும் கடினமாகிவிட்டதாக கைவினைஞர்கள் கூறுகின்றனர். தோல் சுருள்கள் மற்றும் பழுதுக்காகக் காத்திருக்கும் கோல்கள் கடையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டுள்ளன
மாறிவரும் சட்ட திட்டங்களால், தோல்களை வாங்குவது இக்கால கட்டத்தில் கடினமாகிவிட்டது. அசாம் பசு பாதுகாப்பு சட்டம், 2021 பசுக்களை வெட்டுவதை தடை செய்கிறது. ஆனால், இது பதிவுசெய்யப்பட்ட கால்நடை மருத்துவ அதிகாரியால், 14 வயதுக்கு மேற்பட்ட விலங்கு அல்லது நிரந்தர இயலாமை கொண்டது என்று சான்றளிக்கப்பட்டிருந்தால், அந்த கால்நடைகளை வெட்ட அனுமதிக்கும். இதனால், தோல்களின் விலையை உயர்ந்துள்ளது. எனவே புதிய கருவிகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. "விலை அதிகரித்தது பற்றி மக்கள் புகார் கூறுகிறார்கள், ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும்," என்கிறார் பொடூம்.
கிரிபாட் ஒருமுறை, தனது வேலை முடிந்து, தோல் வேலை உபகரணங்கள் மற்றும் டாவோ பிளேடுகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு சோதனைச் சாவடியில் போலீஸார் அவரை நிறுத்தி கேள்விகள் கேட்டுள்ளனர். "எனது தந்தை அவர்களிடம் நான் இன்னாரிடம் வேலை செய்வதாகவும், ஒரு இசைக்கருவியை வழங்க வந்த விவரங்களையும் கூறினார்" ஆனாலும் போலீஸார் அவரை விட மறுத்துவிட்டனர்.
“நீங்கள் அறிந்தது போல, போலீஸ் எங்களை நம்பவில்லை. அவர் மாடுகளைக் கொல்லப் போவதாக அவர்கள் சந்தேகித்தனர்,” என்று பொடூம் நினைவு கூர்கிறார். இறுதியில் கிரிபாட் போலீஸாரிடம் ரூ.5,000 செலுத்திய பின் தான் வீடு திரும்ப முடிந்தது.
வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதால், கூன்னை கொண்டு செல்வதும் ஆபத்தானது. கிரிபாட் கோலாகாட் மாவட்டத்தில் உரிமம் பெற்ற ஒரு பெரிய கடையில் இருந்து, ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ வாங்குகிறார். குறுக்கு வழியில் கடைக்குச் செல்ல சுமார் 10 மணிநேரம் ஆகும், அதிலும் இடையில் படகில் ஏறி பிரம்மபுத்திராவையும் கடக்க வேண்டும்.
"போலீஸார் அதைப் பார்த்தாலோ அல்லது அதை எடுத்துச் செல்லும்போது பிடிபட்டாலோ, ஜெயிலுக்கு போக வேண்டிய அபாயம் உள்ளது" என்று கிரிபாட் கூறுகிறார். “தபேலாவில் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை விளக்கி அவர்களை நம்ப வைக்க முடிந்தால் நல்லது. இல்லாவிட்டால், ஜெயிலுக்கு போக வேண்டியது தான்” என்கிறார்.
இந்தக் கதை, மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் (எம்எம்எஃப்) ஃபெல்லோஷிப் ஆதரவில் உருவானது.
தமிழில் : அஹமத் ஷ்யாம்