“எங்கள் உடம்பில் வண்ணம் தீட்டிக்கொள்வது கடினம். (அதைச் செய்ய) இரவு முழுவதும் விழித்திருக்கவேண்டும்,” என்று கூறுகிறார் தன் உடல் மீது முதல் முதலாக ஆயில் பெயிண்ட் அடித்துக்கொள்ளும் ஆயுஷ் நாயக். “என் உடல் எரிவதுபோல இருக்கிறது. எனவே முடிந்தவரை விரைவாக பெயிண்டை காய வைக்கவேண்டும்,” என்கிறார் அந்த 17 வயது இளைஞர்.
தசரா, ஜென்மாஷ்டமி விழாக்களின்போது ஆடப்படும் பிலி வேஷா ( அல்லது ஹுலி வேஷா) என்ற நாட்டுப்புற நடனம் ஆடுவதற்காக தங்கள் உடலில் பளீர் நிற வண்ணக் கோடுகளைத் தீட்டிக்கொள்ளும் கடலோரக் கர்நாடகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்களில் ஒருவர்தான் ஆயுஷ். சுற்றிலும் மேள ஓசை அதிர, புலி முகமூடி அணிந்துகொண்டு, உறுமிக்கொண்டே இவர்கள் நடனமாடுவார்கள்.
கடலோரக் கர்நாடகத்தில் பேசப்படும் துளு மொழியில் பிலி என்றால் புலி என்று பொருள். வேஷா என்றால் ஒப்பனை (அதாவது... புலிவேடம்) என்று பொருள். “இதில் எதையும், யாரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இது எங்கள் ஆன்மாவில் இருக்கிறது,” என்று கூறுகிற விரேந்திர ஷெட்டிகார் கடந்த 22 ஆண்டுகளாக பிலி வேஷா ஆடிவருகிறார். “மேளத்தின் ஓசையும், அதைச் சுற்றி ஏற்படுகிற ஆற்றலும், உங்களை அந்தத் தாளத்துக்கு ஆடவைக்கும்,” என்கிறார் அவர். 30 வயதுக்காரரான விரேந்திர ஷெட்டிகார் அமேசானில் விநியோகஸ்தராக வேலை செய்கிறார். தன் ஊரைச் சேர்ந்த இளைஞர்களை இந்த ஆட்டத்தில் பங்கேற்கும்படி ஊக்குவிக்கிறார் அவர்.
புலிகள், சிறுத்தைகள் போலத் தோன்றும் வகையில் தங்கள் உடல் முழுவதும் அக்ரிலிக் பெயிண்டால், மஞ்சள், செம்பழுப்பு நிறப் பட்டைக் கோடுகளை வரைந்து கொள்கிறார்கள் இந்தப் புலி நடனக் கலைஞர்கள். முன்பெல்லாம் கரி, மண், பூஞ்சை ஆகியவற்றைக் கொண்டே இவர்கள் பளிச்சென்ற வண்ணங்களைத் தீட்டிக்கொள்வார்கள்.
இந்த நடனத்தின் பாரம்பரிய அடவுகள் மாறி, காலப்போக்கில் சாகசச் செயல்கள் இதில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. முன்னோக்கி, பின்னோக்கி குட்டிக்கரணம் அடிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது, தீயை சுவாசிப்பது என்று ஆபத்தான விளையாட்டுகளுக்கு இதில் முக்கியத்துவம் கூடிவிட்டது. இப்போதைய நடன அசைவுகளை செய்வதற்கு உடல் திறனும், வலிமையும் அபரிமிதமாகத் தேவை. எனவே, இந்தப் பாரம்பரிய நடனத்தை ஆடிவந்த முதியோர் ஒதுங்கிக் கொண்டு இளைஞர்களுக்கு வழிவிட்டிருக்கிறார்கள்.

கடலோரக் கர்நாடகத்தில், தசரா, ஜென்மாஷ்டமி விழாக்களை ஒட்டிய கொண்டாட்டங்களில் ஆடப்படும் நாட்டுப்புற நடனமான பிலி வேஷா ஆடுவதற்கு உடலில் பளிச்சென்ற நிறங்களில் பெயிண்ட் அடித்துக்கொள்ளும் பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களில் ஒருவர் ஆயுஷ் நாயக்
இந்தப் பாரம்பரிய நடனத்தை நிகழ்த்துவதற்கு முதல் நாளே இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடுகின்றன. உடலிலும், முகத்திலும் வண்ணம் தீட்டிக்கொள்வதற்கு பல மணி நேர உழைப்பு தேவைப்படுகிறது. பிறகு கொண்டாட்டம் முடியும் வரை சில நாட்களுக்கு இந்த பெயிண்டை கலைக்காமல் வைத்திருக்கவேண்டும். “முதலில் இது கடினமாக இருக்கும், ஆனால், மேளச் சத்தம் கேட்டவுடனே, அதன் தாளத்துக்கு ஆடவேண்டும் போல இருக்கும் ,” என்று கூறும் ஆயுஷ் 12-ம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
தங்கள் பக்தியைக் காட்டுவதற்காகவும், மக்களை மகிழ்விப்பதற்காகவும், உடலில் புலி போல வண்ணம் தீட்டிக்கொண்டிருக்கும் ஆட்கள், அதிரும் மேளத்துக்கு ஏற்ப ஆடுவார்கள். இளைஞர்கள், புலி வேடம் கலையாமல் இருக்கும் வகையில் வண்ணம் தீட்டிக்கொண்டால், பெண்கள் தங்கள் முகத்தில் மட்டும் புலி போல வண்ணம் தீட்டிக்கொண்டு, உடலில் புலி போலத் தோன்றும் பருத்தி ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள். பிலி வேஷா நடனத்தில் பெண்கள் பங்கேற்பது சமீப காலமாகத்தான் அதிகரித்துள்ளது.
பிலி வேஷா நடனம் ஆடுகிறவர்களுக்கு, கடலோரக் கர்நாடகத்தில் விளையும் நெல், அரிசி போன்றவற்றை அளிப்பார்கள். இன்று உணவு தானியங்களுக்குப் பதில் பணம் தருகிறார்கள். ஒவ்வொரு நடனக் கலைஞரும் இரண்டு நாட்களில்ல சுமார் 2,500 ரூபாய் சம்பாதிப்பார்கள். அதிரடி சாகசங்களில் ஈடுபடும் ஆட்டக்காரர்கள் இரண்டு நாளில் கூடுதலாக 6,000 ரூபாய் சம்பாதிப்பார்கள். “பல பேர் ஆடுவதைப் பார்த்தவுடன், உங்களுக்கே தன்னால் பிலி வேஷா ஆடவேண்டும் என்று தோன்றும்,” என்கிறார் ஆயுஷ்.
வழக்கமாக, குடியிருப்புப் பகுதிக் கமிட்டிகளே இந்த நடன நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யும். ஆயுஷும், அவரது அணியினரும், உடுப்பி, மணிபாலில் ஆண்டு முழுவதும் பிலி வேஷா கொண்டாட்டங்களுக்கு நிதியுதவி செய்யும் ‘யுவ டைகர்ஸ் மஞ்சி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும். வண்ணம் தீட்டுகிறவர்களுக்கும், நடனம் ஆடுகிறவர்களுக்கும் கொடுப்பதற்கு இந்தப் பணம் செலவாகும். போக்குவரத்து, உணவு, பெயிண்ட், ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றுக்கும் இந்தப் பணத்தில் இருந்தே செலவிடுவார்கள்.
மக்களை மகிழ்விப்பதே ஆட்டக்காரர்களுக்கு முன்னுரிமை என்றாலும், பல நூற்றாண்டுகள் பழமையானது என்று சொல்லப்படும் இந்தப் பாரம்பரியத்தின் ஒழுக்கத்தைப் பேணும் வகையில் பல சட்டதிட்டங்களை அவர்கள் கடைபிடிக்கவேண்டும். “ஆடி முடிக்கும்போது, உடம்பெல்லாம் வலிக்கும். ஆனால், மக்களை மகிழ்விக்கவும், இந்த மரபைக் காப்பாற்றவும் நாங்கள் இதைச் செய்கிறோம்,” என்கிறார் ஆயுஷ்.

நடனத்துக்கு முன்பாக, அஷ்வித் பூஜாரிக்கு வண்ணம் தீட்டுகிறார் ரம்ஜான். ஒரு தொழில் முறை களிமண் மாதிரிக் கலைஞரான ரம்ஜான், விழாக்காலத்தில் இந்த நாட்டுப்புறக் கலைக்கு தன் சேவையை வழங்குகிறார்

(இடமிருந்து வலமாக) நிகில், கிருஷ்ணா, புவன் அமின், சாகர் பூஜாரி ஆகியோர் ஜெயகர் பூஜாரியிடம் வண்ணம் தீட்டிக்கொள்வதற்காக காத்திருக்கிறார்கள்

( இடமிருந்து வலமாக ) ஷ்ரேயன் ஷெட்டி, அஷ்லேஷ் ராஜ், கார்த்திக் ஆச்சார்யா ஆகியோர் பெயிண்டின் முதல் கோட் காய்வதற்காக காத்திருக்கிறார்கள். உடலிலும், முகத்திலும் வண்ணம் தீட்டிக் கொள்வதற்கு பல மணி நேர உழைப்பு தேவை

புலிகள், சிறுத்தைகள் போலத் தோன்றும் வகையில் தங்கள் உடல் முழுவதும் அக்ரிலிக் பெயிண்டால், மஞ்சள், செம்பழுப்பு நிறப் பட்டைக் கோடுகளை வரைந்துகொள்கிறார்கள் இந்தப் புலி நடனக் கலைஞர்கள் முன்பெல்லாம், கரி, மண், பூஞ்சை போன்றவற்றில் இருந்து தயாரான வண்ணங்களைப் பூசிக்கொள்வார்கள்

பிலி வேஷா நிகழ்வின்போது சுற்றிலும் மேளங்கள் அதிர, வண்ணம் தீட்டப்பட்ட புலி முகமூடிகளை அணிந்துகொண்டு உறுமிக் கொண்டே ஆடுவார்கள், இந்த ஆட்டக்காரர்கள்

உடலின் மேற்பரப்பு பார்ப்பதற்கு புலி போலவே தோன்ற வேண்டும் என்பதற்காக வண்ணம் தீட்டிய உடம்பின் மீது ஆட்டு ரோமங்களை ஒட்டிக்கொள்கிறார்கள்

நிகழ்ச்சிக்கு முன் சந்தேஷ் ஷேட்டி, அஷ்வித் பூஜாரிக்கு வண்ணம் பூசுகிறார். யுவா டைகர்ஸ் மஞ்சியை சேர்ந்த அஷ்வித்தும் சகக் குழுவினரும் உடுப்பியின் மணிப்பாலில் பிலி வேஷக் கொண்டாட்டங்களுக்கு வருடம் முழுக்க நிதி அளிக்கின்றனர்

துளு மொழியில் ஒப்பனைக்கு வேஷா என்று பெயர். இந்த நாட்டுப்புறக் கலையில் ஒப்பனை ஒரு பிரிக்கமுடியாத அங்கம். விழாக் கொண்டாட்டங்கள் முடியும் வரை ஓரிரு நா ட்களுக்கு இந்த ஒப்பனையை அவர்கள் கலைக்க மாட்டார்கள்

உடலில் அடித்துக்கொண்ட பெயிண்டை மின் விசிறிக்குக் கீழே அமர்ந்து காய வைக்கிறார் புவன் அமின். ‘ இப்போது எட்டாவது முறையாக பிலி வேஷா ஆடுகிறேன், ’ என்று கூறும் புவனுக்கு வயது 11. இவர் 3 வயதாக இருக்கும்போதில் இருந்தே இந்த பிலி வேஷா ஆடுகிறார்

நீண்ட நேர நிகழ்ச்சிகளில் நிலைத்திருப்பதற்காக துளு மொழியில் ‘ ஜட்டி ’ என்று அழைக்கப்படும் நீண்ட துணி, இடுப்பைச் சுற்றிக் கட்டப்படுகிறது. சாகச நிகழ்ச்சிகளின்போது உடைகள் கலையாமல் இருப்பதற்கும் இந்த ஜட்டி உதவுகிறது

அபினவ் ஷெட்டி முதல் முறையாக நடனம் ஆடப்போகிறார். இந்தப் பத்து வயது கலைஞருக்கு நடனத்துக்கு முன்பாக உணவு அளிக்கிறார் அவரது தாய்

நடனத்துக்கு முன்பாக தனது சகோதரியோடு போட்டோவுக்கு போஸ் தருகிறார் அபினவ்

( இடமிருந்து வலமாக ) சாகர் பூஜாரி, ரஞ்சித் ஹரிஹர்புரா, விஷால், நவீன் நித்தூர் ஆகியோர் நிகழ்வுக்காக தயாராகிறார்கள்

அமினுக்கு இது முதல் நிகழ்வு என்பதால் எண்ணெயோடு சேர்த்து பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். அவரை விட இளையவர்களாக இருந்தாலும், ஏற்கெனவே அனுபவம் உள்ளவர்களான சிலர் நடனம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு அவருக்கு சில அறிவுரைகளைத் தருகிறார்கள்

யுவ டைகர் மஞ்சி அணியினர் ஒரு புகைப்படத்துக்கு போஸ் தருகிறார்கள். இவர்கள் எல்லோரும் புலி நடன நிகழ்வை நடத்திக்காட்ட தயார் நிலையில் இருக்கிறார்கள்

கரும்புலியாக வண்ணம் தீட்டிக்கொண்ட பிரஜ்வல் ஆச்சார்யா, தனது சாகசத் திறன்களைக் காட்டுகிறார். இந்த நடன வடிவத்தில் பாரம்பரிய அடவுகள் மாறி, ஆபத்தான சாகசங்கள் முக்கியத்துவம்பெற்றுவிட்டன

முன்னோக்கிய, பின்னோக்கிய குட்டிக்கரணம், தலையில் தேங்காய் உடைப்பது, தீயை சுவாசிப்பது உள்ளிட்ட சாகசங்கள் இந்த நடனத்தில் நிகழ்த்தப்படுகின்றன

இந்த நடனத்துக்கு மிகுந்த உடல் வலுவும், திறனும் தேவைப்படுவதாக ஆகிவிட்டது. எனவே, இந்தப் பாரம்பரிய ஆட்டத்தில், வயதானவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு விலகிவிட்டார்கள்

தங்கள் பக்தியைக் காட்டுவதற்காகவும், மக்களை மகிழ்விப்பதற்காகவும் உடலில் புலி போல வண்ணம் தீட்டிக்கொண்ட ஆட்டக்காரர்கள் மேளத்தின் அதிரும் தாளத்துக்கு ஏற்ப ஆடுகிறார்கள்

நடனக் கலைஞர்களுக்கு முன்பெல்லாம் கடலோரக் கர்நாடகத்தில் விளையும் நெல், அரிசி முதலிய தானியங்களைத் தருவார்கள். இப்போது உணவு தானியங்களுக்குப் பதில் பணம் தரப்படுகிறது

ஒவ்வொரு நடனக் கலைஞரும் இரண்டு நாளில் சுமார் 2,500 ரூபாய் சம்பாதிப்பார். சாகசங்களை நிகழ்த்தும் நடனக் கலைஞர்கள் கூடுதலாக 6,000 ரூபாய் சம்பாதிப்பார்கள்

சந்தேஷின் பாட்டி கமலா ஷெட்டி, தாய் விஜயா ஷெட்டி ஆகியோர் பிலி வேஷா ஆடுவதற்கு முன்பு அவரை வாழ்த்துகிறார்கள். சந்தேஷ் ஒரு 21 வயது புகைப்படக் கலைஞரும், ஓவியரும் ஆவார். ‘ கடந்த 4 ஆண்டுகளாக பிலி வேஷா ஆடுகிறேன். எதிர்காலத்திலும் ஆடுவேன், ’ என்கிறார் அவர்

விரேந்திர ஷெட்டிகார் முகத்தில் புலி முகமூடி அணிந்திருக்கிறார். இப்படி முகமூடி அணிந்திருப்பவர் பொதுவாக, அந்த நடனக் குழுவின் முக்கியப் புலி ஆவார்

விரேந்திரா கடந்த 22 ஆண்டுகளாக பிலி வேஷா ஆடுகிறார். ‘ மேளத்தின் ஓசையும், அதைச் சுற்றி உண்டாகும் ஆற்றலும் உங்களை தாளத்துக்கு ஆட வைக்கும் ,’ என்கிறார் அவர்

இளம் புலி ஆட்டக்காரர்களை ஊர் மக்கள் தூக்கிக்கொண்டு ஆடுகிறார்கள்

முதல் ஆட்டம் முடிந்தவுடன், ஆடைகளை மாற்றிக்கொள்கிறார் 30 வயது விரேந்திரா. அமேசானில் விநியோகஸ்தராக வேலை செய்யும் இவர், ஊரில் உள்ள இளைஞர்களை இந்த நடன நிகழ்வில் பங்கேற்க ஊக்குவிக்கிறார்

மக்களை மகிழ்விப்பதே இந்த நடனக் கலைஞர்களுக்கு முன்னுரிமை என்றாலும்,
இந்தப் பாரம்பரியத்தின் ஒழுக்கத்தைக் காப்பதற்காக பல சட்ட திட்டங்களைப் பின்பற்றுகிறார்கள்
ஆட்டக்காரர்கள்
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்